குசேலன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை கிண்டியில் அமைந்துள்ள லீ மெரிடியன் நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. சிறிய ஹால். பெரிய கூட்டம்! ஒருவர் மடியில் மற்றொருவர் உட்காராத குறைதான். இத்தனைக்கும் வாசலிலேயே பலரை நிறுத்தி திருப்பி அனுப்பினார்கள். (இதுபோன்ற பிரமாண்டமான விழாக்களை காமராஜர் ஹால் போன்ற பெரிய ஆடிட்டோரியங்களில் நடத்துவதுதானே வழக்கம்?)
- மேடைக்கு ரஜினி வந்து சில நிமிடங்கள் கழித்துதான் வந்தார் பாரதிராஜா. இவருக்கு பின் இருக்கையில் சீட் ஒதுக்கப்பட, சட்டென்று இதை கவனித்த ரஜினி நாற்காலியை முன்னால் போட சொல்லி அமர வைத்தார் பாரதிராஜாவை.
- எல்லாருடைய பேச்சையும் கண்களை மூடி உன்னிப்பாக கவனித்த ரஜினி,
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரின் பேச்சை அதிகமாகவே ரசித்தார். அவர் பேசி முடித்ததும் அருகில் அமர்ந்திருந்த ஏ.ஆர்.ரஹ்மானை பார்த்து கண்களாலேயே சைகை செய்து 'அருமை' என்பது போல் ஜாடை காட்டினார்.
- சற்று தாமதமாக வந்த வடிவேலு, ரஜினியின் கால்களை தொட்டு வணங்கினார்.
- வல்லமை தாராயோ பட இயக்குனர் மதுமிதா, பெரிய பூச்செண்டுடன் மேடைக்கு வந்து ரஜினியிடம் கொடுக்க, தனது உதவியாளரிடம் கொடுத்து அந்த பூங்கொத்தை தனது காரில் வைக்க சொன்னார் ரஜினி.
- நண்பனை பற்றிய படம் என்பதால், தங்கள் நெருங்கிய நண்பர்களை மேடைக்கு அழைத்து முதல் சி.டி யை கொடுத்து மகிழ்ந்தார்கள். ரஜினி, தனது நண்பர் முரளியை அழைத்து சி.டி யை வழங்கினார் (இந்த முரளிதான் இப்போது ரஜினியின் ராகவேந்திரா மண்டப நிர்வாகி)
- 'இதுக்குதான் இவங்களை கூப்பிட வேணாம்னு சொன்னேன், கேட்டீங்களா' என்று கத்திக் கொண்டிருந்தார் பி.வாசு. அவர் 'இவங்களை' என்று குறிப்பிட்டது பத்திரிகை போட்டோகிராபர்களை. நிற்கவே இடமில்லாத ஹாலில் போட்டோகிராபர்களின் எண்ணிக்கை மட்டும் இருநூறை தாண்டும்!
- பாலசந்தர், திரையுலகில் நெருங்கிய நண்பராக தன்னை குறிப்பிட, நெகிழ்ந்து போனார் பாரதிராஜா. 'இந்த பெருமை போதும். இதற்கு முன் நான் பத்மஸ்ரீ விருது வாங்கிய போது கூட இந்த மகிழ்ச்சியை அடையவில்லை' என்று மனமுருக பேசிய பாரதிராஜா, பாலசந்தர் காலில் விழுந்து வணங்கினார்.
இறுதியாக ரஜினி பேசியதுதான் டாப்! மலையை தூக்கி காட்டியாச்சு. இனிமேல் கடப்பாரையை தூக்கி காட்டினால் ஜனங்க எப்படி ஏத்துப்பாங்க? என்று நான் யோசித்தேன். பாட்ஷா, முத்து, சிவாஜி, சந்திரமுகி, ஆகிய படங்களுக்கு பின் எதிர்பார்ப்பு ஜாஸ்தி ஆகிவிட்டது. அதைவிட பெரிய படங்களில் நடிக்கணும் என்று பாலசந்தர் சாரிடம் சொன்னேன். இப்படி பெரிய படங்களா நடிச்சா, அதுக்கு பிறகு என்ன படம் செய்வது என்ற சிக்கல் வந்திடும். அதனாலே இடையிடையே சின்ன படமும் பண்ணலாம் என்றார் அவர். அப்படி உருவானதுதான் இந்த படம்.
இந்த படத்துக்கு யாரை இசையமைப்பாளராக போடலாம்னு யோசிச்சப்போ இளையராஜாதான் என் மனதில் வந்தார். ஒரு நாள் வெயில் படத்தின் சி.டி யை கேட்டபோது பாடல்கள் எல்லாமே ரொம்ப நல்லா இருந்தது. ஜி.வி.பிரகாஷ் எப்படின்னு ஷங்கரிடம் கேட்டேன். அருமையான பையன். ரொம்ப டேலண்ட் என்று சொன்னார். அது உண்மை. ரஹ்மானிடம் உள்ள ப்ளஸ் பாயிண்ட் எல்லாம் இந்த பையனிடம் இருக்கு. அப்படின்னா மைனஸ் பாயிண்ட் என்னன்னு கேட்காதீங்க. தெரியலை. ரொம்ப பேர் சொல்றாங்க... அவர் விடியற்காலை இரண்டு, மூணு மணிக்கெல்லாம் அப்பாயின்ட்மெண்ட் கொடுத்து வரச்சொல்றாருன்னு (சிரிப்பு)
ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது ஒரு பையன் வந்து என் பக்கத்தில் நின்றான். ரொம்ப நேரமாக என்னையே பார்த்துக் கொண்டு நின்றான். இந்த பையனை அனுப்பாமல் பக்கத்தில் நிற்க வைத்திருக்கிறார்களே என்று எனக்கு கோபம் வந்தது. அந்த பையனிடம் போட்டோ எடுக்கணுமா என்றேன். ஆமாம் என்றான். பிறகுதான் பக்கத்தில் உள்ளவர்கள் சொன்னார்கள். இவர்தான் ஜி.வி.பிரகாஷ் என்று. பாடல்களை கேட்டு ஆச்சர்யப்பட்டேன். இளையராஜாவும், ஏ.ஆர்.ரஹ்மானும் கலந்த மாதிரி இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
இந்த படத்தில் நான் இளமையாக இருப்பதாக சொன்னார்கள். சிலருக்கு சந்தேகம். இமயமலைக்கு போய் வேர் ஏதாவது சாப்பிடுகிறாரோ என்று. நான் ஓயிட் ஃபுட் எதையும் சாப்பிடுவதில்லை. அதாவது உப்பு, சர்க்கரை, அரிசி சோறு, மாத்திரை, பால், தயிர், நெய் ஆகியவற்றை. இதெல்லாம் நாற்பதை, ஐம்பதை கடந்தவர்களுக்குதான். முப்பது வயதில் இதையெல்லாம் விட்டுட்டா மன அழுத்தம் வந்திடும். அதனால் நல்லா சாப்பிடுங்க. சரி, இதையெல்லாம் குறைச்சுட்டா உடம்புக்கு ஆயில் வேண்டாமா? அதுதான் பாசிட்டிவ் திங்க்கிங்! நான் நல்லாயிருக்கேன். நல்லாவே இருப்பேன் என்று நினைச்சுகிட்டே இருங்க. நல்லாவே இருப்பீங்க! இவ்வாறு ரஜினி பேசினார்.
'பின்' குறிப்பு - படத்தின் நாயகன் என்று சொல்லப்பட்ட பசுபதியும், நாயகி மீனாவும், விழாவில் ஆப்சென்ட். விசாரித்தால் விளம்பரங்களில் தன்னை இருட்டடிப்பு செய்வதாக வருந்துகிறார்களாம் இருவரும். குசேலன் விளம்பரங்களில் அதிகம் அடிபடும் நயன்தாராவும் ஆப்சென்ட்! ஏனோ?
-ஆர்.எஸ்.அந்தணன்
படங்கள் : பிரகதீஸ்வரன் |