பிரபல கம்பெனிகள், அல்லது பிரபல இயக்குனர்கள் இவர்களுக்கு மட்டுமே பாட்டு கட்டுவார் என்று நினைத்திருந்தவர்களின் எண்ணத்தை ஒரு நொடியில் பொடிப் பொடியாக்கியிருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து. ரோபோ படத்திற்காக ஊட்டியில் அமர்ந்து எல்லா பாடல்களையும் எழுதி முடித்துவிட்டு சென்னைக்கு வந்திருக்கும் கவிஞருக்கு திடீர் யோசனை உதித்தது. ஆண்டுக்கு முப்பது படங்களுக்காவது பாடல்கள் எழுதினால் என்ன என்று!
அதை உடனடியாக செயல்படுத்தும் திட்டத்தில் இறங்கியிருக்கிறாராம். புதுமுக இயக்குனர்கள் யாரும் வைரமுத்துவை அணுகுவதில்லை. அதே போல புது இசையமைப்பாளர்களும் வளைந்து கொடுக்க மாட்டாரோ என்ற அச்சத்தில் கவிஞரது வீட்டுப்பக்கம் போவதில்லை. ஆனால், எட்டி நின்று பார்த்தால் எட்டிக்காய். பக்கத்தில் போனால் பழரசம் என்பதுதான் கவிஞரின் குணமாம். இந்த நேரத்தில் ஆண்டுக்கு முப்பது படங்கள் என்ற கவிஞரின் இலக்கு இவர்களை போன்ற இலகுவானவர்களுக்கும் புரிந்தால் அது சாத்தியப்படலாம்.
அதிருக்கட்டும்... கவிஞரின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம்? திரை இசை தமிழில் வந்திருக்கும் தேக்கம்தானாம். நல்ல தமிழில் பாடல் எழுதுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதை போக்கும் விதத்தில் நிறைய பாடல்கள் எழுத வேண்டும். அதன் முதல் முயற்சிதான் இது என்கிறாராம். நல்ல முயற்சி. அப்படியே ஒரு பாடலுக்கு ஒரு லட்சம் என்கிற சம்பள தொகையை குறைத்தால், நாலு பேர் வந்து போகிற இடமாக இருக்கும் கவிஞரின் இல்லமும்!
-ஆர்.எஸ். |