தசாவதாரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தொடர்பான கசமுசா இன்னும் முடிந்தபாடில்லை. தொடர்ந்து இதுபற்றி கிசுகிசுக்கும் கோலிவுட் பிரபலங்கள், லேட்டஸ்டாக கிசுகிசுத்த தகவல் இது-
நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்ட கார் பாஸ் வேறோரு கேட் வழியாக உள்ளே வருவதற்கு மட்டுமே அனுமதிக்கும் பாஸ். அது தெரியாமல் நேராக மேடைக்கு அருகில் இருக்கும் வாசலுக்கு செல்ல முயன்றவரை வாசலிலேயே நிறுத்திவிட்டதாம் போலீஸ். உள்ளுக்குள் விஜய் இருப்பது தெரியாமல், காரை வேறு கேட்டுக்கு திருப்பும்படி வலியுறுத்தினார்களாம். அதன்பின்பு வெளியே எட்டிப்பார்த்த விஜய், “இன்னொரு கேட்டில் காரை நிறுத்தினால், நான் நடந்தல்லவா உள்ளே செல்ல முடியும்? இத்தனை ரசிகர்கள் சுற்றி நிற்கும்போது நான் எப்படி நடந்து போக முடியும்?” என்று கேட்டபின், அவசரம் அவசரமாக அவரது காரை உள்ளே அனுமதித்தார்களாம். இப்படி முக்கிய விருந்தினர்களுக்கு கார் பாஸ் வழங்கியதிலும் குளறுபடிகள்!
இவரைப்போலவே சிக்கிக் கொண்ட இன்னொரு பிரபலம் ஹிந்தி படவுலக தாரகை ஹேமமாலினி. இவர் தனது இன்விடேஷனை கையோடு எடுத்துவரவில்லை. அவரையும் வாசலிலேயே மடக்கியது போலீஸ். பதறிப்போன சில பி.ஆர்.ஓக்கள் ஓடிவந்து இவர் ஹேமமாலினி. உள்ளே விடுங்கள் என்று சொல்லியும் காதில் வாங்கிக் கொள்ளாத போலீஸ், அப்படியென்றாலும் இவருக்கு ஒரு அழைப்பிதழ் கொடுத்திருப்பார்களே, அதை காட்ட சொல்லுங்கள் என்று சொல்ல எரிச்சலாகிவிட்டாராம் ஹேமமாலினி. பிறகு வேறொரு அழைப்பிதழை போலீசுக்கு காட்டிய பி.ஆர்.ஓ ஒருவர், அதில் ஹேமமாலினி படம் அச்சிட்டிருப்பதை காட்டிய பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
மும்பையிலிருந்து கமல்ஹாசனால் அழைக்கப்பட்டிருந்த பத்திரிகையாளர்கள், விழா முடிந்ததும் கமலிடம் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினார்களாம். அவர்களை வேறொரு இடத்தில் சந்தித்த அவர், தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டாராம். அதோடு அவர்கள் அனைவரும் திருப்பதி கோவிலுக்கு சென்றுவர ஏற்பாடு செய்ததாகவும் கேள்வி.
-லென்ஸ் லெனின் |