கல்லூரிக்கு நேரில் செல்ல முடியாதவர்கள் அஞ்சல் வழியில் படிப்பார்கள். நடிப்பு கல்லூரியில் சேர்ந்து அஞ்சல் வழியில் நடிப்போரும் உண்டு. இதோ- அஞ்சல் வழி உண்ணாவிரதம் ஒன்று. தமிழ் திரையுலகமே ஒன்றுகூடி சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டிருக்கையில் பெரம்பலூரில் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள் ஒரு திரைப்பட குழுவினர். இந்த உண்ணாவிரதத்தின் விபரத்தை தயாரிப்பாளர் சங்கத்திற்கு அஞ்சல் மூலம் அனுப்பியிருக்கிறார்களாம். தமிழ் தேசம் என்ற படத்தின் படப்பிடிப்பு பெரம்பலூரில் நடந்து வருகிறது. இதில், மணிவண்ணன் மகன் ரகுவண்ணன்தான் ஹீரோ. அச்சச்சோ, மலரினும் மெல்லிய, மாணவன் நினைத்தால் படங்களில் நடித்த வர்ஷினி என்ற ஆதிராதான் ஹீரோயின். படப்பிடிப்பை நிறுத்திவிட்டு சென்னை வந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொள்கிற அளவுக்கு தாங்கள் முக்கியமானவர்கள் அல்ல என்று நினைத்தார்களோ என்னவோ? படப்பிடிப்பு நடந்த இன்ஜினியரிங் கல்லூரி வாசலிலேயே ஒரு பந்தலை போட்டு யூனிட்டோடு உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்து விட்டார்கள். படத்தின் இயக்குனர் தமிழ்செல்வா உள்ளிட்ட அத்தனை பேரும் கன்னடர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பி உண்ணாவிரத பந்தலை பரபரப்பாக்கினார்கள். விஷயத்தை கேள்விப்பட்ட லோக்கல் ஜெயா டி.வி, ராஜ் டி.வி, ஏ.எம்.என் சேனல் நிருபர்கள் அங்கே கூடவும் சென்னை போலவே அங்கேயும் உண்ணாவிரதம் களைகட்டியதாம்.
-ஆர்.எஸ். |