தமிழ் திரையுலகம் நேற்று நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில், வெவ்வேறு கட்சிகளை சேர்ந்த நடிகர்கள் இருப்பதால் கூடுமானவரை அரசியல் பேசுவதை தவிர்த்துவிடலாம் என்று நினைத்திருந்தார்கள். யாராவது அரசியலை கடுமையாக பேச ஆரம்பித்தால், அதை தடுக்கும் விதமாக மைக் அருகிலேயே சில முக்கியஸ்தர்களும் நிறுத்தப்பட்டிருந்தார்கள். ஆனால், அதையும் மீறி நடந்த சில விஷயங்கள் பார்வையாளர்களை திகைக்க வைத்தது.
விஜயகாந்த் பேசும் போது, அணுசக்தி திட்டம் குறித்து இடதுசாரிகள் தங்களது கருத்துக்களை கூறுவதுபோல் மத்திய அரசில் கூட்டணி வைத்துள்ள தமிழக அரசு இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார். அதன் பிறகு பேச வந்த நடிகரும், தி.மு.க அனுதாபியுமான வாகை சந்திரசேகர், கலைஞருக்கு புள்ளி வைக்கவும் தெரியும். புள்ளி வைத்து அதில் கோலமும் போட தெரியும் என்று விஜயகாந்துக்கு பதிலடி கொடுத்தார். காலையில் வந்து முன் வரிசையில் இடம் பிடித்துவிட்ட இவர், முன்னணி நடிகர்கள் வரும்போது இடம் கொடுக்காமல் கெட்டியாக அமர்ந்து கொண்டார். விஜயகாந்த் வரும்போது ரஜினி பக்கத்தில் அமர இடம் கொடுப்பார்கள் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் ரஜினி பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு கடைசிவரை எழவே இல்லை மனோரமா. இவருக்கு பக்கத்தில் வாகை சந்திரசேகர். ரஜினிக்கு இடது புறத்தில் இந்த பிரச்சனை என்றால், வலது புறத்தில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார். நியாயப்படி அவர் அந்த இடத்தில்தான் அமர வேண்டும். கடைசியில் போட்டோகிராபர்களின் வசதிக்காக ரஜினி அமர்ந்திருக்கிற இடத்திற்கு வந்த விஜயகாந்த் போஸ் கொடுத்தபின் நான்கு சீட்டுகள் தள்ளி அமர்ந்தார்.
பிற்பகலில் கமல் வந்தபிறகும் இதே பிரச்சனைதான். ரஜினி-கமல் கலந்து கொண்ட எல்லா விழாக்களிலும், இருவருக்கும் அருகருகில் இடம் கொடுப்பார்கள். அரசு விழாக்களிலும் இதே வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த முறை இருவருக்கும் நடுவில் அமர்ந்திருந்தார் சரத்குமார். ஒரு வணக்கம் போட்டுக் கொண்டதோடு சரி. ரஜினியும், கமலும் கடைசிவரை மேடையில் பேசிக் கொள்ளவே இல்லை.
விஜயகுமார் பேசும்போது அடிக்கடி ரஜினி பெயரை உச்சரித்தார். ரஜினியின் பெருமைகளை அவர் பட்டியலிட்டுக் கொண்டே போக கூட்டம் விசிலடித்து சந்தோஷப்பட்டது. ஆனால், இந்த உண்ணாவிரதத்தின் நோக்கத்தை விட்டு விலகி, ரஜினியின் பெருமை பேசும் மேடையாக இதை மாற்றிய விஜயகுமார் மேல் கடும் கோபத்தில் இருந்தார் சத்யராஜ். தனது பேச்சில், இதை அப்பட்டமாக வெளிக்காட்டிய அவர், யார் பெயரை சொல்லியும் கைதட்டல் வாங்குவதற்காக நான் வரவில்லை. நடிகர்களின் தனிப்பட்ட பெருமையை பேசி கைதட்டல் வாங்குவதற்கான இடமல்ல இது. அப்படி கைதட்டல் வாங்குவதற்கு பதிலாக நாக்கை பிடுங்கிக் கொண்டு சாகலாம் என்று அனல் கக்கினார். சத்யராஜ், தன்னைதான் குறிவைக்கிறார் என்றதும் மேலோட்டமாக அதற்கு பதிலடி கொடுத்தார் ரஜினி. அதிகமாக பேசி மக்களிடம் மதிப்பும், மரியாதையும் வாங்குறது கஷ்டம் என்றார்.
சன் டி.வி, மற்றும் கலைஞர் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு என்றதும், பாபிலோனா, சிஸர் மனோகர் போன்ற பல துண்டு துக்கடா நடிகர், நடிகைகள் மேடையில் ஏறிக்கொண்டு இறங்காமல் அடம் பிடித்தது தனிக்கதை!
-ஆர்.எஸ்.
படங்கள்-பிரகதீஷ் |