வருடக்கணக்காக இழுத்துக் கொண்டிருக்கும் சீரியல்களுக்கு மத்தியில் மைக்ரோ சீரியல் என்ற புது யுக்தியை அறிமுகப்படுத்தியிருக்கிறது பிரமிட் சாய்மீரா. ஸ்லிம் அழகி சிம்ரன்தான் இவர்களின் புது முயற்சிக்கு நாயகி. சிம்ரன் திரை என்ற பெயரில் ஜெயா டி.வி யில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது இந்த தொடர். மாதம் ஒரு எழுத்தாளரின் கதை, நறுக்கு தெறித்தார் போல் வசனங்கள், முக்கியமாக எலாஸ்டிக் இழுவை இல்லை! இவையெல்லாம்தான் இந்த சிம்ரன் தொடரை சிலாகிக்க வைத்திருக்கிறது.
மக்களை சென்றடைவதற்கு முன்பாகவே இந்த சீரியலின் மேல் நம்பிக்கை வைத்து சிம்ரன் திரையுடன் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறது இதயம் நல்லெண்ணை நிறுவனம். இந்த தொடருக்கு பிராண்டிங் விளம்பரதாரர் இவர்கள்தான். சீரியலின் நடுநடுவே விளம்பரம் கொடுத்தோம், வேலை முடிந்தது என்று போகிற அலட்சியம் இல்லை இவர்களிடம். இத்தொடரை மேலும் பிரபலப்படுத்த சில வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இதயம் நல்லெண்ணை பாக்கெட்டுகளுடன் வழங்க 15 லட்சம் பைகள் அச்சிடப்பட்டிருக்கின்றன. அத்தனையிலும் சிம்ரன் திரை விளம்பரங்கள் இடம் பெற்றிருக்கிறதாம். அதே போல் புத்தங்களின் நடுவில் அடையாளத்திற்கு வைக்கப்படும் புக் மார்க் 15 லட்சம் அச்சிடப்பட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. அதிலும், சிம்ரன் திரை விளம்பரம்தான்.
வண்ணத்துப்பூச்சி சீரியல் முடிந்து அடுத்த கதை ஆரம்பமாகிவிட்டது. அனுவும் நானும் என்ற இந்த மைக்ரோ சீரியலுக்கு கதை ஸ்ரீப்ரியா. இயக்கம் அகத்தியன். சிம்ரனுடன் பிரேம் சாய், தாரிகா, துர்கா, பேபி ப்ரகஷீதா, ரேவதி சங்கரன் ஆகியோர் நடிக்கிறார்கள். வைரமுத்து எழுதிய டைட்டில் பாடலுக்கு ரமேஷ் வினாயகம் இசையமைத்திருக்கிறார்.
இதயம் நல்லெண்ணை உடலுக்கு மட்டுமல்ல, இது போன்ற நல்ல சீரியல்களுக்கு கை கொடுக்கிற விதத்தில் மனசுக்கும் நல்லதுதான்...
-ஆர்.எஸ்.அந்தணன்
|