| பிரபாகரன் என்ற சிங்கள படத்தை தமிழ்நாட்டில் வைத்து பிரிண்ட் போடும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அப்படத்தின் இயக்குனர் பெரிஸ் தாக்கப்பட்டார். பிறகு இப்படத்தை திரையிட்டு பார்ப்பது என்றும், ஆட்சேபத்திற்கு உட்படாமல் இருந்தால் பிரிண்ட் போட்டுக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள எம்.எம் தியேட்டரில் படத்தை திரையிட்டார்கள். பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், மற்றும் பா.ம.க வின் துணைப்பொதுச் செயலாளர் முத்துக்குமார், நடிகர் சத்யராஜ், இயக்குனர்கள் சீமான், திராவிட தமிழர் பேரவையை சார்ந்த சுப.வீரபாண்டியன் ஆகியோர் படத்தை பார்த்தனர். பின்பு நிருபர்களிடம் பேசிய திருமா, பிரபாகரன் பற்றியும், புலிகள் பற்றியும் இப்படத்தில் இழிவாக சித்தரிக்க முயன்றிருப்பதாக குற்றம் சாட்டியதுடன் இப்படத்தை தமிழகத்தில் பிரிண்ட் போடவும், திரையிடவும் எதிர்ப்பு தெரிவித்தார். சூட்டோடு சூடாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் இராம.நாரயணனை சந்தித்து இப்படத்தை தடைசெய்யுமாறு ஒரு மனுவையும் கொடுத்தார்.
பின்பு நிருபர்களிடம் பேசிய திருமா, “சிங்கள ராணுவத்திற்கு நன்றி தெரிவித்து இந்த சினிமா எடுக்கப்பட்டுள்ளது. சிங்கள ராணுவம்தான் இந்த படத்தை எடுத்துள்ளதாக கருதுகிறேன். ஒட்டு மொத்த தமிழர்களின் உணர்வுகளை சிறுமைபடுத்துவதாகவும், ஈழத்தமிழர்களை கொச்சைப்படுத்தும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன. தமிழர்களை கொந்தளிக்க செய்யும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே பிரபாகரன் படத்தின் எந்த தொழில் நுட்ப வேலைகளும் தமிழகத்தில் நடக்கக்கூடாது.
பள்ளி சிறுவர்களையும், கர்ப்பிணி பெண்களையும் தங்களது தேவைக்காக விடுதலைப்புலிகள் பயன்படுத்திக் கொள்வதாக படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. படம் வெளியானால் இலங்கை தமிழர்கள் மற்றும் சிங்களர்களுக்கு இடையே இனக்கலவரம் வெடிக்கும். எனவே அதற்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யவிருக்கிறேன்” என்று கூறினார்.
-ஆர்.எஸ்.
|