| நாம் சிரித்தால் சில்லரை, நடிகைகள் சிரித்தால் கரன்சி. இந்த தத்துவத்தை நன்றாக தெரிந்து வைத்திருக்கும் சினேகா, சினிமாவில் மட்டுமல்ல, பொது இடங்களிலும் புன்னகை இளவரசிதான். பல நேரங்களில் இதுவே கால்ஷீட்டை கவர்ந்து வரும் கருவியாகவும் இருக்கிறது அவருக்கு. இவர் வயது ஹீரோயின்கள் பிள்ளைகளை நர்சரி ஸ்கூலுக்கு அழைத்துப் போக ஆரம்பித்துவிட்டார்கள். ஆனாலும், கால்ஷீட் டைரியை ஃபுல்லாக்கி வைத்திருக்கிறார் சினேக்.
அச்சமுண்டு அச்சமுண்டு படத்திற்காக அமெரிக்கா செல்வதற்கு முன், குசேலன், அங்காடி தெரு என்ற இரண்டு படங்களில் தனது ஃபேவரைட் புன்னகையை பந்தி வைக்க போகிறாராம். இரண்டு படங்களிலும் அவர் நடிகையாகவே தோன்றவிருக்கிறார். ரஜினியோடு நடித்துவிட வேண்டும் என்பதை தனது லட்சியமாகவும், கனவாகவும் வைத்திருந்த சினேகாவுக்கு குசேலன் படத்தில் நடிக்க அழைப்பு வந்ததும் குஷியாகிவிட்டாராம். இவரோடு சேர்ந்து ஐந்து நாயகிகள் இந்த லிஸ்டில் இருந்தாலும், கொஞ்சங்கூட வருந்தவில்லை அவர். சம்பள விஷயத்திலேயும் பெரிதாக முரண்டு பிடிக்கவில்லையாம். இதற்கு பிறகு சினேகா நடிக்கவிருக்கும் இன்னொரு முக்கியமான படம் ராடன் டி.வி தயாரிப்பில் உருவாகவிருப்பது. இதில் சரத்குமார் ஜோடியாக நடிக்கிறார். இயக்கம் கே.எஸ்.ரவிக்குமார். முதன் முதலாக கே.எஸ்.ரவிக்குமாருடனும், சரத்குமாருடனும் இந்த படத்தில் இணைகிறார் சினேகா.
இப்படி கோலிவுட் மைதானத்தில் தொடர் செஞ்சுரி அடிக்கும் சினேகாவை மார்கண்டேயினி என்றால் பொருத்தமாக இருக்குமா? கேட்டால் அதற்கும் ஒரு புன்னகையை சிதற விடுவார்.
-ஆர்.எஸ் |