| சிங்கள மொழியில் உருவாகியிருக்கும் படம் பிரபாகரன். இதில் விடுதலைப்புலிகள் சிறுவர்களை போருக்கு பயன்படுத்துவது பற்றியும், அவர்களில் பலர் விருப்பமில்லாமல் இந்த பணிகளில் ஈடுபடுகிறார்கள் என்றும் கருத்துகள் சொல்லப்பட்டிருகிறதாம். பிரபாகரனை இழிவாக சித்தரித்திருக்கும் இப்படத்திற்கு பிரிண்டுகள் போட சென்னைக்கு வந்திருந்தார் அப்படத்தின் இயக்குனர் பெரீஷ். ஜெமினி லேப்பில் அவர் இந்த முயற்சியில் ஈடுபட்டிருந்தார். விஷயத்தை கேள்விப்பட்ட திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், இயக்குனர் சீமான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னியரசு ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் அங்கு திரண்டனர்.
இப்படத்திற்கு பிரிண்ட் போட்டுத் தரக்கூடாது என்று அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சத்தம் கேட்டு வெளியே வந்த இயக்குனர் பெரீஷ், விளக்கம் சொல்ல முயல, சரமாரியாக தாக்கப்பட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரும் வரவழைக்கப்பட்டனர்.
தமிழர் குறித்து தவறாக சித்தரிக்கும் படத்தை தமிழ்நாட்டில் வந்து பிரிண்ட் போடுவது முறையா? என்று கேள்வி எழுப்பட்டது. முடிவாக, வருகிற 27-ந் தேதி பிரபாகரன் படத்தை பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகிய இருவருக்கும் போட்டு காண்பிப்பது என்றும், அவர்களுக்கு ஆட்சேபம் இல்லையென்றால், இங்கு அதற்கான பிரிண்டுகளை போட்டுக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
-ஆர்.எஸ்.
|