| எத்தனை படங்களில் நடித்திருந்தாலும், அவர் கருவாப்பையா கார்த்திகாதான்! பாடல்கள் நன்றாக அமைந்துவிட்டால் போதும், ரசிகர்கள் மனசில் நங்கூரம் பாய்ச்சி விடலாம் என்பதற்கு கார்த்திகாவும் ஒரு உதாரணம். அதன்பின் பிறப்பு படத்தில் உலக அழகி நான்தான் என்று இவர் ஆடிய பாடலுக்கு குட்டீஸ் மத்தியில் பெரிய வரவேற்பு. இப்போது ராமன் தேடிய சீதை படத்தில் ஐந்து ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்தாலும், பொறுத்தமான பாடல் ஒன்று இவருக்காகவே அமைந்திருக்கிறது. என்ன புள்ள செஞ்ச... பாவிப்பய நெஞ்ச என்று ஒரு பாடல். அதில் கார்த்திகாவின் வழக்கமான துள்ளல் இருக்கிறதாம். முதலில் ஐந்து ஹீரோயின்களில் ஒருத்தியாக நடிக்கணுமா என்று நினைத்தாராம். கதையை கேட்டபின் இதில் நடிக்காம விட்டா பின்னாடி மனசு கஷ்டப்படும் என்பதால் நடித்தாராம்.
அக் மார்க் தமிழ் பொண்ணான இவரை அண்டை மாநிலங்களிலும் நடிக்க அழைக்கிறார்களாம். தெரிஞ்ச மொழியை விட்டு தெரியாத மொழியிலே நடிப்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்க போகிறது என்பதால் அந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டாராம் கார்த்திகா. விடாப்பிடியாக தமிழில் நடித்து நம்பர் ஒன் இடத்தை பிடிக்கணும்ங்கிறது கார்த்திகாவின் லட்சியம்.
லட்சியம் நிறைவேற நிச்சயமா ஒன்று செய்யணும். அது கவர்ச்சி... கவர்ச்சி... கவர்ச்சி. செய்வீங்களா?
-ஆர்.எஸ். |