| அம்மா கோண்டு என்பார்கள் ஐயர் வீடுகளில். அப்படியரு அப்பா கோண்டுகள்தான் ஜெயம் ரவியும், ராஜாவும்! அப்பா -பிள்ளை கதையை இவர்களை விட யாரால் சிறப்பாக சொல்லிவிட முடியும்? ஒவ்வொரு பிரஸ் மீட்டுக்கும் வந்து பிள்ளைகளின் பதில்களை ரசித்துக் கேட்கும் எடிட்டர் மோகன் அன்று வரவில்லை. இனி ட்ரெய்னிங் எதற்கு என்று நினைத்தாரோ என்னவோ? ஆனாலும் பிள்ளைகளின் பேச்சில் எல்லையில்லாத சந்தோஷ்(ஷம்)
இதுவரை பல படங்களில் நடிச்சுட்டேன். ஆனால், எனக்கு இப்படி ஒரு படம் இனிமேல் அமையவே அமையாது. அப்படி ஒரு படம் இது. என்னாலேயும் சரி, என் அண்ணனாலும் சரி, இந்த படத்திற்காக கிடைக்கப் போற புகழை வேறு படத்தின் மூலம் அடைந்து விட முடியுமா என்பது சந்தேகமே என்றார் ஜெயம் ரவி. ஒவ்வொரு அப்பாவும், தன் மகனோடு இந்த படத்தை பார்க்கணும். ஒவ்வொரு மகனும் தன் அப்பாவோடு இந்த படத்தை பார்க்கணும் என்றார் ஜெயம் ராஜா. நேரடியாக படம் எடுப்பதை விட ரீமேக் பண்ணுவதுதான் கஷ்டம். வெறும் வீடியோவை பார்த்து அதில் இருக்கிற லைட்டிங், பிரேமிங் எல்லாத்தையும் செட் பண்ணணும். அதுதான் கஷ்டம் என்கிற ராஜா, எத்தனையோ நாட்கள் என் தம்பியை ஸ்பாட்டில் உட்கார வச்சு ஒரே ஒரு ஷாட் மட்டும் எடுத்து அனுப்பியிருக்கேன். எதுக்கும் அவன் முகம் சுளிச்சது கிடையாது. இப்படி ஒரு ஹீரோ கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும் என்றார்.
தமிழ்சினிமாவின் எந்த படத்திற்கும் மேடையேற்றப்படாத படத்தின் டிசைனர் இந்த பிரஸ் மீட்டில் சந்தோஷமாக மேடையேற்றப்பட்டார். சித்தார்த்துக்கு நன்றியையும் சொன்னார் இயக்குனர் ராஜா. தொடர்ந்து பேசிய ராஜா, "ஜெனிலியாவை கொஞ்சம் கூட கவர்ச்சியாக காட்டவில்லை" என்று சொன்னதுதான் நம்மை போன்ற சந்தோஷ சுப்ரமணியன்களை கவலை கொள்ள வைத்தது
-ஆர்.எஸ்.அந்தணன் |