|
எம்.ஜி.ஆர். என் கனவில் வந்தார்!
பிரபல மலையாள இயக்குநர், அடூர் கோபாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட 'சி.டி.ஏ'விருது விழாவில்,
பிரபல தமிழ்பட இயக்குநர் வி.சி.குகநாதன் பேச்சு!! |
சமீபத்தில், சென்னையில் தென்னிந்திய திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்கள் அசோசியேசனின் 2005ம் ஆண்டுக்கான 'சி.டி.ஏ' விருது வழங்கும் விழா நடைபெற்றது.
'தாதாசாகிப் பால்கே' விருதும், 'பத்மவிபூஷன்' விருதும் பெற்ற பிரபல மலையாள இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இவ்விழாவில், இயக்குநர் கே.விஸ்வநாதன், சி.டி.ஏ. தலைவர் கே.ராமச்சந்திரகுரூப் ஆகியோரும் கலந்து கொண்டு தேர்ந்து எடுக்கப்பட்டவர்களுக்கு விருது வழங்கினார்கள்.
'வாழ்நாள் சாதனை'க்காக அப்பொழுது, 'எம்.ஜி.ஆர் விருது' பெற்ற இயக்குநர் வி.சி.குகநாதன்; நான், 12 வயதில் எம்.ஜி.ஆரின் 'மலைக்கள்ளன்' படம் பார்த்துவிட்டு சினிமாவில் சேரவேண்டும் என்று, என் நாட்டை (இலங்கை) விட்டு தமிழகத்திற்கு ஓடி வந்தேன். 14 வயதில் 'கலங்கரை விளக்கம்', 'முகராசி' ஆகிய படங்களில் பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. 17 வயதில் 'புதியபூமி' படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பை எனக்குக் கொடுத்தார்.
அதுமுதல், என் வாழ்க்கையில் எம்.ஜி.ஆர் இடம் பெறாது எந்த சம்பவமும் நடை பெற்றது கிடையாது. இப்பொழுது கூட, 'இது எம்.ஜி.ஆர் இல்லம்' எனும் பெயரில் 250வது கதை எழுதி வருகிறேன்.
இந்த கதையை எழுதுவதற்கு முன் என் கனவில் வந்த எம்.ஜி.ஆர், என்னைத் தட்டி எழுப்பி., என்னை மறந்து விட்டாயா? எனக்கேட்டார். அடுத்த நாள் இரவு, 10.30மணிக்கு எம்.ஜி.ஆர் சமாதிக்கு சென்று சுமார் 15நிமிடம் தியானம் செய்து கொ£ண்டிருந்தேன்.
அப்பொழுது, எம்ஜி.ஆர் சமாதி மீது நடிகர் ராஜ்கிரண் கால்மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்திருப்பது போல் ஒரு காட்சி என் மனக்கண் முன் தோன்றியது. என்னடா இது, சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் காட்சிகள்... கனவுகள் வருகிறதே எனும் எண்ணத்தில் வீட்டிற்கு வந்தேன்.
அடுத்த இரண்டு நாட்களுக்குள்., இந்த கதைக்கேற்ற ஹீரோ ராஜ்கிரண்தான் என்பதை உணர்ந்தேன். உடன் ராஜ்கிரணின் வீட்டிற்குப் போனேன். அங்கு வாசலில் நின்று கொண்டு வரவேற்ற ராஜ்கிரண், வாங்க., டைரக்டர் சார்... நீங்க வருவீங்கன்னு தெரியும்... எம்.ஜி.ஆர் நேற்று என் கனவில் வந்து சொன்னார். நான் இந்தக்கதையில் நடிக்க ஆவலாக இருக்கிறேன் என்றார்.
இன்றும் என்போன்றவர்களுக்கு எம்.ஜி.ஆர். கடவுளாக வாழ்கிறார் என்பது இதன்மூலம் தெளிவாகிறது அல்லவா.?! எனக்கு இன்று, எம்.ஜி.ஆர். விருது கிடைத்திருப்பது நான் செய்த பாக்கியம் என்று பேசி முடித்தார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரபல மலையாள இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் பேசும் போது, இளைஞர்கள் இன்னும் பெருவாரியாக சினிமாவிற்கு வரவேண்டும். அவ்வாறு வருபவர்கள்... பழையவர்களையும், பழசையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் ஏனென்றால், பழசில் இருந்துதான் புதுசு பிறக்கிறது என்றார்.
மேலும், இவ்விழாவில் 'சித்திரம் பேசுதடி' படஇயக்குனர் மிஷகின், பழம் பெரும் இயக்குனர் ஏ.சி.திருலோக்கசந்தர், இசையமைப்பாளர் எம.எஸ்.விஸ்வநாதன் உள்பட இன்னும் பல சினிமா பிரபலங்களுக்கும்., 'கலைஞர் கருணாநிதி விருது' உள்பட இன்னும் பல விருதுகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் இராம.நாராயணன், இயக்குனர் கேயார்... உள்பட இன்னும் பல திரையுலக வி.ஐ.பிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
-கார்த்திக். |