விஜயகாந்தின் கோபம்

சினிமா தொடர்பான கேள்விகளையும், அரசியல் கேள்விகளாகவே நினைத்து காட்டமாகிவிடுகிறார் விஜயகாந்த். சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தவர், இன்முகம் தொலைத்து வன்முகம் காட்டியிருப்பதுதான் அதிர்ச்சி. இத்தனைக்கும் கேள்வியில் அப்படியன்றும் பெரிய அணுகுண்டு இல்லை.
நீங்கள் நடிக்கும் எங்கள் ஆசான் படத்தின் பட்ஜெட் என்ன? சாதாரணமாகவே தாங்கள் படத்திற்காக செய்யும் செலவை நான்கு மடங்கு ஏற்றிச் சொல்லி, பரபரப்பை கிளப்புவது சினிமாக்காரர்களின் பாணி. இந்த கேள்விக்கு 'தயாரிப்பாளரை கேளுங்கள்' என்று பதில் சொல்லியிருந்தால் விவேகம். ஆனால் வேகத்தை காட்ட வேண்டும் என்று நினைத்த விஜயகாந்த், 'இதே கேள்வியை கலைஞரிடம் கேட்பீங்களா? உளியின் ஓசை படத்திற்கு பட்ஜெட் எவ்வளவு? என்று அவரிடம் போய் கேட்டுப் பாருங்களேன்' என்று சீறியிருக்கிறார்.
அரசியல் பரமபதத்தில் ஏணியை பிடித்து ஏறிக் கொண்டிருக்கும் கருப்பு எம்.ஜி.ஆர், நிருபர்களிடம் பதில் சொல்கிற விஷயத்தில் வெள்ளைக் கொடியை பிடித்தால் இன்னும் மரியாதையாக இருக்குமே!
|